தொடர் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் எட்டே நாட்களில் 50 ஆயிரம் கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 25ம் திகதி முதல் இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு நான்காவது கட்டமாக வரும் 31ம் திகதி வரை தொடர்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உச்சம் பெற்றுள்ளது.
இந்தியாவில் முதல் 100 கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கையை தொடுவதற்கு 45 நாட்கள் (ஜனவரி 30 - மார்ச் 15 வரை) எடுத்திருந்தது. ஆனால் அடுத்த 14 நாட்களில் (மார்ச் 16 - மார்ச் 29 வரை) கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டது.
அடுத்த 16 நாட்களில் (மார்ச் 30 - ஏப்ரல் 14 வரை) பத்தாயிரத்தை கடந்த நிலையில் மே 7ம் திகதி (23 நாட்களில்) ஐம்பதாயிரத்தை தொட்டது. அந்த வகையில் முதல் ஐம்பதாயிரத்தை கடப்பதற்கு 98 நாட்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், அடுத்த 12வது நாளில் 2வது ஐம்பதாயிரம் தொற்றாளர்களுடன் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது.
மூன்றாவது 50 ஆயிரத்தை கடப்பதற்கு வெறும் எட்டே நாட்கள்தான் தேவைப்பட்டுள்ளது. மே-19 தொடக்கம் 27 ம் திகதி வரையான 8 நாட்களில் ஐம்பதாயிரம் புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிக்கும் வேகத்தில் வரும் நாட்களில் புதிய தொற்றாளர்களது எண்ணிக்கையில் கூடுதலான அதிகரிப்பு ஏற்படக் கூடும் எனவும் விரைவான நாட்களில் இரண்டு இலட்சத்தை தொடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையிலும் சடுதியான கொரோனா பரவல் அதிகரிப்பானது நிலமை கட்டுமீறிச் சென்றுள்ளதோ என பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, உலகம்