இலங்கையில் நேற்று (மே-28) மட்டும் 61 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை தொற்று நோயியல் பிரிவு நேற்று (மே-28) பின் இரவு 11.30 மணிவரையான நிலவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நேற்று இனம் காணப்பட்ட 61 பேரில், கடற்படையினர் 26 பேரும், துபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கிரகம தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 17 பேரும், குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் திருகோணமலை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பவர்களில் 18 பேரும் உள்ளடங்குகின்றனர்.
அதேவேளை நேற்று புதிதாக 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 775 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை இனம் காணப்பட்டுள்ள 1,530 தொற்றாளர்களில் கடற்படையைச் சேர்ந்த 718 பேரும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த 46 பேரும் உள்ளடங்கியுள்ளனர். அதேவேளை இதுவரை 357 கடற்படையினர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை