அமெரிக்கா - மினசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் பகுதியில் கருப்பினத்தவா் ஒருவா் பொலிஸாரால் கொல்லப்பட்டதை எதிா்த்துப் போராடிவருவோரை வன்முறைக் கும்பல் என விழித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இட்ட பதிவை ருவிட்டா் நீக்கியுள்ளது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, உண்மையை கூறும் குரல்களை சமூக வலைதளங்கள் சில அடக்கி வைக்கின்றன. இதனை சரி செய்யா விட்டால் அவற்றை முழுவதுமாக மூட நேரிடும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்திருந்தார். குறிப்பாக ருவிட்டா் தளத்தை அவா் கடுமையாகச் சாடினாா்.
தொடா்ந்தும் ருவிட்டருடன் மோதல் போக்கு வலுவடைந்த நிலையில் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் ட்ரப்ப் நேற்று கையெழுத்திட்டார்.
எனினும் அவரது மிரட்டலுக்கு அஞ்சாத ருவிட்டா் வன்முறையைத் தூண்டுவதாகத் தெரிவித்து அவரது மற்றொரு பதிவை நேற்று நீக்கியுள்ளது.
மோசடி வழக்கில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட கருப்பினத்தவா் ஒருவரை மினியாபொலிஸ் பிராந்தியப் பொலிஸாா் கொடுமைப்படுத்திக் கொலை செய்ததற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.