கொரோனா பரவல் காரணமாக அவுஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்தவா்கள் அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 23 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் 75 வீதமானோர் 23 மாதங்கள் வரை காத்திருக்கவேண்டியுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுன் மாதம் இக்காலப்பகுதி 16 மாதங்களாக காணப்பட்டுள்ளது.
கொரோனா கால கட்டுப்பாடுகள் காரணமாக தனித்தனியாக நேர்காணல்களை நடத்தமுடியாதுள்ளமையும், குடியுரிமை பரீட்சைகளை நடத்தமுடியாதுள்ளமையுமே இதற்கான பிரதான காரணங்களாக உள்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த சுமார் 123,727 பேரின் விண்ணப்பங்கள் தேங்கியிருப்பதாக தெரிவிக்கப்படும் அதேநேரம் மே 22ஆம் திகதி வரை 175,304 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்வுகளை நடத்தமுடியாத சூழல் எழுந்ததையடுத்து பலரும் இணையவழியாக உறுதியேற்று குடியுரிமையை பெற்றுவருகின்றனர்.
இதன்படி சுமார் 16,800 பேர் இதுவரை இணையவழி உறுதியேற்பு நிகழ்வு ஊடாக குடியுரிமையை பெற்றுள்ளனா்.
Category: செய்திகள், புதிது
Tags: ஆஸ்திரேலியா