இலங்கையில் நேற்று புதிதாக 62 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை தொற்று நோயியல் பிரிவால், நேற்று (மே-30) பின் இரவு 11.55 மணிவரையான நிலவரங்களின் அடிப்படையிளலான வெளியிடப்பட்ட கொரோனா தொற்று தொடர்பான அறிக்கையில் இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொற்றுக்குள்ளான கடற்படையினர் - 742!
அதனடிப்படையில் நேற்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 25 கடற்படையினருடன் சேர்த்து கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரது எண்ணிக்கை 742 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் இதுவரை 388 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது 354 கடற்படையினர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றுக்குள்ளான நாடு திரும்பியவர்கள் - 502!
வெளிநாடுகளில் இருந்து அண்மையில் விசேட விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு நாடு திரும்பியவர்களில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தவிர வெளிநாட்டினர் 3 பேருக்கும் கொரேனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்படத்தக்கது. நேற்று இனம் காணப்பட்ட 37 நாடுதிரும்பியவர்களில், மாலைதீவிலிருந்து வந்த 03 பேரும், குவைத்திலிருந்து வந்த 08 பேரும், கட்டாரிலிருந்து வந்த 26 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் (மே-29) குவைத்திலிருந்து வந்ததாக அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் இராணுவ உறுப்பினர் என சரிப்படுத்தப்பட வேண்டும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். ஆரம்ப கட்ட ஆவணப்படுத்தலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உறுதிப்படுத்தலை அடுத்து இது அறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இராணுவ உறுப்பினர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகை தரும் பகுதியில் கடமையில் ஈடுபட்ட நிலையில், குவைத்திலிருந்து வந்த குழுவுடன் நெருக்கமாக தொடர்புற்று பணிகளில் ஈடுபட்டவர் எனவும், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குணமடைந்தோர் எண்ணிக்கை 781!
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சையின் பின்னர் நேற்று 27 பேர் குணமடைந்துள்ளதையடுத்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்கள் - 829!
நாடு முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில், நேற்று புதிதாக தொற்றாள்களாக இனம் காணப்பட்ட 62 பேருடன் சேர்த்து தற்போது 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழப்பு - 10!
இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 10 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை