மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற் கொண்ட 9 பேரையும் எதிர்வரும் ஜூன்-11 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை(மே-31) உத்தரவிட்டார்.
கடந்த வியாழக்கிழமை மாலை வாகனேரி குளத்துமடு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக இரண்டு உழவு இயந்திரத்தில் மண் ஏற்றி சென்ற போது வகுளாவலை சந்தியில் பொதுமக்கள் வழிமறிக்கப்பட்டது. இதையடுத்து உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற மண்ணை பறிமுதல் செய்ய முயன்ற பொதுமக்களுக்கும் உழவு இயந்திரத்தில் மண் ஏற்றி சென்றவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் உழவு இயந்திரத்தில் சென்றவர்களுடன் மேலும் சிலரும் ஒன்றிணைந்து பொதுமக்கள் மீது தாக்குல் மேற்கொண்டனர்.
இதில் 11 பேர் காயமடைந்ததுடன் இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து இராணுவத்தினர் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், எஸ்.யோகேஸ்வரன், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதாக தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டு தலை மறைவாகியிருந்த 9 பேர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (மே-31) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்பாக முன்னிலைப் படுத்தப்பட்டபோது எதிர்வரும் ஜூன்-11 திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை வாகனேரி பகுதியில் ஓட்டமாவடி காவத்த முனையை சேர்ந்தவர்களினால் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக பிரதேச மக்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளதுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு