மறைந்த அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களிடமிருந்து கொவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட யாரேனும் அடையாளம் காணப்பட்டால் சட்டத்தை மீறிச் செயற்பட்டவா்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகா் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகா் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இவ்வாறு எச்சரித்துள்ளாா்.
இறுதிச் சடங்குகளை ஒழுங்கமைத்தவா்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அதிகாரம் கொண்ட அதிகாரியான சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகம் வரை செல்வாக்குச் செலுத்த முயற்சித்ததாக தமக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளாா்.
சட்டத்தை மீறும் அரசு அதிகாரிகளில் கடமைகளுக்கு இடையூறு செய்ய முயன்ற அதிகாரத் தரப்பினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதியை கோருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகா் சங்கத் தலைவா் தெரிவித்துள்ளாா்.
சட்டத்தை மீறி இறந்த ஒருவரின் உடலை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.