"மலையகம் தொடர்பில் எனது தந்தை வைத்திருந்த கனவுகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்." - இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இன்றைய இறுதிக்கிரியை நிகழ்வில் மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அப்பாவுக்குத் தகுதியான இறுதி அஞ்சலியைச் செலுத்த முடியவில்லை. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின்னர், மாபெரும் அஞ்சலி நிகழ்வு நடத்தப்படும்.
பல்கலைக்கழகம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மலையகம் தொடர்பில் பல்வேறு கனவுகளுடன் எனது தந்தை இருந்தார். கிராமங்களை உருவாக்க நினைத்தார். ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை தொடர்பில் இறுதிவரை பேசினார்.
அவரின் கனவுகளை நிறைவேற்றுவது எனது பொறுப்பு. எனக்கு அனுபவம் இல்லை என்று பலர் கூறுகின்றனர். இதனை நான் முன்னர் என் தந்தையிடம் கேட்டேன். முதுகில் குத்துவதற்குத்தான் அனுபவம் தேவை, மக்களுக்குச் சேவை செய்ய இல்லை என்று என்னிடம் கூறினார். அவர் இவ்வளவு சீக்கிரம் மறைந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.
இத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிந்துவிடும் என்று நினைப்பவர்களுக்கும், அச்சத்தில் உள்ள மக்களுக்கும் ஒன்று கூறுகின்றேன். இருட்டைப் பார்த்து பயப்பட வேண்டாம். காலையில் சூரியன் உதிக்கும்; சேவல் நிச்சயம் கூவும்" - என்றார்.