தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் படையினருக்கு ஒரு சட்டமா என வனவளப்பிரிவினரிடம் வைத்திய கலாநிதி சிவமோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை பிடித்து விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்காக படையினர் வேலியிட்டுள்ளார்கள்.
இதற்கு நடவடிக்கை எடுக்காத வனவளப்பிரிவு தமிழ் மக்கள் தங்களுக்கு உரித்தான காணிகளை அபிவிருத்தி செய்ய முற்படும் போது அவர்களுக்கு இடையூறு செய்து நீதிமன்றங்கள் மூலம் வழக்குத் தொடுத்து வருவது எதற்காக அப்படி எனில் இலங்கையின் நீதி படையினருக்கு ஒன்றாகவும் தமிழ் மக்களுக்கு ஒன்றாகவும் உள்ளதா என்பதை உரியவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த விடயத்தில் தெரியவருவது யாதெனில் வனவளப்பிரிவானது தமிழ் மக்களின் காணிகளைப்பிடித்து படையினருக்கு வழங்கும் தரகு வேலையை செய்து வருக்கின்றது.
இது இன நல்லிணக்கத்திற்கு ஆரோக்கியமான விடயம் அல்ல என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது படையினரால் அடாத்தாக பிடிக்கப்பட்டிருக்கும் காணிகள் முழுவதும் பொதுமக்களின் பூர்வீக வாழ்விடங்கள் வனவளப்பிரிவினரின் ஒத்துழைப்போடு இவை படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது
இராணுவத்தினர் விவசாயம் தோட்டப்பயிர்ச் செய்வதனால் சிங்களப்பகுதிகளில் செய்யட்டும் தமிழர் நிலம் தமிழர்களுக்கு சொந்தமானது. இங்கு தொழில் வாய்ப்பில்லாமல் தமிழ் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது படையினர் எமது வளங்களை சுரண்டிச் செல்ல அனுமதிக்க முடியாது.
எனவே செட்டிகுளம் ஆண்டியா புளியங்குளத்தில் படையினர் அபகரித்த காணிகளை உடனடியாக பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா