இலங்கையில் இன்று இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக உறுதி செய்யப்பட்டுள்ள ஆறு பேர் தொடர்பான விபரங்கள் வெளிவந்துள்ளன.
இந்தோனேசியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய நிலையில் பெல்வெரா தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த ஒருவர் மற்றும் பொலாரஸ் நாட்டில் இருந்து திரும்பிய நிலையில் தியகம தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவர் என வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தவிர முல்லைத்தீவு கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த கடற்படை மாலுமி ஒருவர் மற்றும் கல்பிட்டியவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் என இரண்டு கடற்படையினரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
ஏனைய இருவரும் இராஜகிரிய ஆயுர்வேத நிலையத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்கள் எனவும், நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக உறுதிசெய்யப்பட்டிருந்த இராணுவ சிப்பாயுடன் தொடர்பு பட்டவர்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 811 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், தற்போது 817 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை