தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இரண்டாவது நாளாக இன்றும் ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு.
தமிழ்நாட்டில் மே மாத தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 29ம் திகதி 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் (மே-30) 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று (மே-31) என்றுமில்லாதவாறு உச்சம் தொட்டு ஆயிரத்து 149 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்த நிலையில் இன்று அதையும் கடந்த எண்ணிக்கையாக ஆயிரத்து 162 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோன தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 413 பேர் குணமடைந்து திரும்பியுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 13,170 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாடு கொரோனா பாதிப்பு அதிகரித்த மாநிலமாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று அதிகபட்ச பதிவாக 964 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதையடுத்து சென்னையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 15 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மொத்த உயிரிழப்பு 184 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை