இலங்கையில் இன்று (ஜூன்-1) மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (மே-31) மேலும் 13 பேர் தொற்றுக்குள்ளாகி இருந்த நிலையில் மொத்த தொற்று 1,633 ஆக அதிகரித்திருந்தத நிலையில் இன்று ஏற்கனவே ஆறுபேர் இனம்காணப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 1,639 ஆக அதிகரித்திருந்தது.
இந்நிலையில் சற்று முன்னதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 1,643 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த 4 பேரும் பங்களாதேஷில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
முன்னதாக உறுதி செய்யப்பட்டிருந்தவர்களில் இந்தோனேசியா மற்றும் பொலாரஸ் நாட்டில் இருந்து திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்த இருவரும், முல்லைத்தீவு கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த கடற்படை மாலுமி ஒருவர் மற்றும் கல்பிட்டியவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவர், இராணுவத்தினரது உறவினர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.
அதேவேளை இன்று 10 பேர் சிகிச்சையின் பின்னர் குணமாகி திரும்பியுள்ளதையடுத்து குணமானவர்களது எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 817 பேர் நாடு முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குவைத் நாட்டடில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய நிலையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் இன்று (ஜூன்-1) உயிரிழிந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை