அமெரிக்காவில் கறுப்பினத்தவா் ஒருவா் பொலிஸாரால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதை எதிா்த்து அங்கு போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில் ‘அன்டிபா’ என்ற குழு இடதுசாரி அமைப்பே போராட்டங்களைத் தூண்டுவதாகவும் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக என்று அறிவிக்கப்போவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தாா்.
“இந்தப் போராட்டங்கள்அமைதிப் போராட்டம் அல்ல. இவை உள்நாட்டு பயங்கரவாதம், அப்பாவி உயிர்களை பலிவாங்குவது, அப்பாவிகளின் இரத்தம் சிந்துவது நியாயமற்றது. இது மனிதகுல விரோதம், கடவுளுக்கு எதிரான குற்றம்.
அப்பாவி மக்களின் சொத்துக்களை சூறையாடுவோர் கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்தப் போராட்டங்களை தூண்டிவிடும் அன்டிஃபா உள்ளிட்ட அமைப்புக்களைச் சோ்ந்தவா்கள் நீண்ட காலம் சிறைகளில் இருக்க நேரிடும் எனவும் அவா் எச்சரிக்கை விடுத்தாா்.
அமெரிக்க மக்களை காப்பாற்றுவதுதான் என் தலையாய கடமை. நம் நாட்டின் சட்டங்களைக் காப்பாற்றவே பதவியேற்றுள்ளேன். இதைத்தான் நான் செய்வேன் எனவும் ட்ரம்ப் கூறினாா்.
கறுப்பின அமெரிக்கரான ஜோா்ஜ் பிளாய்ட் பொலிஸாரால் கொல்லப்பட்டதற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தொடா்ந்தும் வலுவடைந்து வருகின்றன.
வொஷிங்டனில் ஜனாதிபதி வாசஸ்தலமான வெள்ளை மாளிகை அருகிலேயும் நேற்று ஆயிரக்கணக்கானோர் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள கட்டடங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தீவைக்கப்பட்டன.
வெள்ளை மாளிகை முன்பு நேற்று போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அச்சமடைந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள பதுங்கு குழியில் சிறிது நேரம் பதுங்கியிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மனைவி, மகன் ஆகியோருடன் பதுங்குக் குழியில் இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.