கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கை சென்று இந்தியா திரும்பமுடியாமல் சிக்கியிருந்த இந்திய பிரஜைகளை ஏற்றிய கப்பல் இன்று காலை தூத்துக்குடியை வந்தடைந்தது.
இன்று காலை 693 பயணிகளுடன் தூத்துக்குடி துறை முகத்திற்கு இலங்கையில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஐஎன்எஸ் ஜலஸ்கா எனும் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.
இவர்கள் வருவதை ஒட்டி தூத்துக்குடி துறைமுகத்தில் பலத்த பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் துறைமுக நுழைவு வாயிலில் உள்ள ஆரஞ்சு கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இமிகரேஷன் எனப்படும் சுங்கச் சோதனை மற்றும் மருத்துவ சோதனைச் சாவடிக்கு கூட்டி வர ஏற்பாடு செய்துள்ள பேருந்துகள் மற்றும் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இலங்கையிலிருந்து பயணிகளுடன் வருகை தந்த இந்தியக் கடற்படைக் கப்பலை அதிகாரிகள் வரவேற்றனர். இக்கடற்படை கப்பலானது Red gate எனப்படும் நிலக்கரி ஆயில் கப்பல்கள் இயங்குதளத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.