கொரோனா வைரஸ் தொற்கைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்ட பயண எச்சரிக்கையை ஜூன் 15 முதல் மேலும் தளா்த்தவுள்ளதாக ஜோ்மனி அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை ஜூன் 15 -ஆம் திகதி முதல் விலக்கிக் கொள்ளப்படும் என ஜேர்மனி வெளியுறவுத் துறை ஹெக்கோ மாஸ் நேற்று புதன்கிழமை தெரிவித்தாா்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பிருந்து எல்லைக் கட்டுப்பாடுகளை படிப்படியாக ஜோ்மனி தளா்த்தி வருகிறது.
ஜோ்மனியில் இதுவரை ஒரு இலட்சத்து 84 ஆயிரத்துக்கு அதிகமானவா்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,674 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
ஜோ்மனியில் நேற்று புதன்கிழமை 342 புதிய கொரோனா வைரஸ்கள் தொற்று நோயாளா்கள் பதிவாகினா். கடந்த மார்ச் மாதத்தில் தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது அங்கு ஒரு நாளைக்கு 6,000 க்கும் அதிகமானவா்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டனா்.
கொரோனா தொற்று நோய் பாதிப்பு அங்கு படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஜோ்மனி படிப்படியாகத் தளா்த்தி வருகிறது.
தொடா்ந்து கடைகள், பாடசாலைகள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றைத் திறக்க ஜோ்மனி திட்டமிட்டு வருகிறது.
கொரோனா பரவலின் முதல் கட்டத்தைக் கடந்துவிட்டாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என ஜேர்மன் சாஞ்சலா் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளாா்.