பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞன் ஒருவரை, கஞ்சா மற்றும் வாளினை, ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்திய போது இன்று கல்முனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து தெரிய வருவதாவது,
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களான சார்ஜன்ட் ஏ.எல்.எம் நவாஸ்(43404) பொலிஸ் கொன்ஸ்டபிள் வை.டி. செலருக்கு(40313) தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலுக்கமைய மேற்குறித்த உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் சார்ஜன்ட் ஏ.எச் அப்துல் மஜித்(64270) கொஸ்தாபிள் ஏ.எல் ஹிதாயதுல்லா(76354) ஆகியோர் கார் ஒன்றில் மாறுவேடம் அணிந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதன்போது மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைத்தொலைபேசி ஊடாக சந்தேக நபரான செம்பகம் என அழைக்கப்டும் நபரை தொடர்பு கொண்டு கஞ்சாவினை வாங்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது தொலைபேசியில் தொடர்பினை ஏற்ற சந்தேக நபர் கஞ்சா மற்றும் வாள் என்பவற்றை தம்முடன் எடுத்து கொண்டு கறுப்பு நிற வர்ணமுடைய வாகன இலக்கத்தகடு அற்ற பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸ் குழு சந்தேக நபரை மடக்கி பிடித்ததுடன் 300 கிராம் நிறையுடையதும் பாடசாலை புத்தகத்தில் சுற்றிய நிலையில் 75 கஞ்சா பக்கேற்றுக்கள் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 2 அடி நீளமுடைய வாள் கைத்தொலைபேசி மற்றும் டியோ ரக கறுப்பு நிற மோட்டார் சைக்கிள் ஒன்றினை மீட்டுள்ளனர்.
அத்துடன் இவ்வாறு கைதான சந்தேக நபர் மருதமுனை அல்மனார் வீதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் எனவும், அவரை நாளை (ஜூன்-5) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்முனை பொலிஸார் மேலும் தெரவித்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை