வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், விசேட பொலிஸ் செயலணியின் உறுப்பினர்கள், மாவட்டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மேலதிக மாவட்ட அரச அதிபர்கள், உள்ளூர் அதிகார சபை ஆணையாளர், கல்வித் திணைக்கள செயலாளர், உள்ளூர் அதிகார சபை செயலாளர், போக்குவரத்துத் அதிகார சபை தலைவர் மற்றும் செயலாளர், ஆளுநரின் செயலாளர் மற்றும் உதவிச் செயலாளர் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"வடக்கு மாகாண பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவற்காக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அளப்பரிய சேவைகளைப் பாராட்டுக்கின்றேன். தற்போது வடக்கு மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் சமுதாயத்தைப் பாதிக்கின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மதுபான தயாரிப்பு, மதுபான விற்பனை, களவுகள் மற்றும் வாள்வெட்டு, போதைப்பொருள் துஷ்பிரயோகம், வீதி விபத்துக்கள் ஆகியன தொடர்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.
முக்கியமாக மணல் அகழ்வை முறையான சட்டங்களுக்கு உட்பத்தி அதற்கான அனுமதிகளை வழங்கி தேவைப்படும் பட்சத்தில் மட்டும் மணல் அகழ்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது. மணல் அகழ்வு வியாபாரம் அல்ல என்பதை அனைவரும் மனதில்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தைப் பாதிக்கின்ற வகையில் களவு, வாள் வெட்டு, போதைப்பொருள் விற்பனை போன்ற விடயங்களின் பின்னணிகள் உள்ளிட்ட அனைத்துக் காரணங்களையும் கண்டறிந்து அவற்றைத் தடைசெய்வதோடு நிலைமை களை முற்றாகக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
வீதி விபத்துக்கள் தொடரும் நிலையில் அதற்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து போக்குவரத்துச் சட்டங்களை இறுக்கமாகப் பின்பற்றுவதோடு சட்டத்தை மீறுவோருக்குப் பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும்.
இதுபோன்ற சட்டவிரோதமான விடங்களைத் தடுப்பதன் ஊடாகவே எமது மாணவர்களையும், இளம் சந்ததியினரையும், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் நேரிய முன்னேற்றப் பாதையொன்றில் இட்டுச் செல்லமுடியும்.
அந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக கிராம அலுவலர்கள் முதல் மாவட்ட அரச அதிபர்கள், மேலதிக அரச அதிபர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாருக்குப் பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
அதன்மூலமே எமது சமுதாயத்தைக் கண்ணியமுள்ள - ஒழுக்கமான சமுதாயமாக முன்னேற்றம்மிக்கதாக மாற்ற முடியும் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக பாடசாலைகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். அத்துடன் பாடசாலை மாணவர்களுக்காகப் பாடசாலை கால அட்டவணையையும், அரச மற்றும் தனியார் பஸ்களின் கால அட்டவணையையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய கால அட்டவணையைத் தயார் செய்து நடைமுறைப்படுத்த போக்குவரத்துத் அதிகார சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சமுதாய நலனில் அக்கறைகொள்ள வேண்டிய மாணவர்களையும் இளைஞர் - யுவதிகளையும் உருவாக்க திணைக்களங்கள் தங்களுக்கான அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்