இலங்கை கடற்படையினர் 42 பேர் உள்ளிட்ட 62 புதிய தொற்றாளர்கள் நேற்றைய (ஜூன்-4) தினம் இனம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தொற்று நோயியல் பிரிவு நேற்று பின்னிரவு 11.00 மணி வரையான நிலவரங்களின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று 62 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.
இவ்வாறு நேற்றும் இன்றும் இனம் காணப்பட்ட 62 பேரில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து விசேட விமானத்தின் மூலம் நாடு திரும்பியவர்கள் எனவும், 42 பேர் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர்களில் 16 பேருக்கும், துபாயில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து திரும்பிய மூவர் என 20 பேர் நேற்று இனம் காணப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான கடற்படையினர் - 844: உறவினர் 36!
நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேரில், கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த 31 பேரும், ஒலுவில தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து மூன்று பேரும், இயக்கச்சி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து 5 பேரும், மிகிந்தல தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து ஒருவரும் உள்ளடங்குகின்றனர். அதனடிப்படையில் நேற்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 42 கடற்படையினருடன் சேர்த்து கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரது எண்ணிக்கை 844 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் இதுவரை 426 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது 418 கடற்படையினர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றுக்குள்ளான நாடு திரும்பியவர்கள் - 600!
வெளிநாடுகளில் இருந்து அண்மையில் விசேட விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு நாடு திரும்பியவர்களில் நேற்று 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்தமாக 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தவிர வெளிநாட்டினர் 3 பேருக்கும் கொரேனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்படத்தக்கது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 839!
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சையின் பின்னர் நேற்றும் 3 பேர் குணமடைந்துள்ளதையடுத்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்கள் - 947!
நாடு முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில், நேற்று புதிதாக தொற்றாள்களாக இனம் காணப்பட்ட 62 பேருடன் சேர்த்து தற்போது 947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழப்பு - 11!
குவைத் நாட்டடில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய நிலையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் ஜூன்-1 உயிரிழிந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை