ஜேர்மனியின் கொலோன் பல்கலைக்கழக தமிழ் துறை விரைவில் மூடப்படும் நிலையில் உள்ளதாக அங்கு தமிழ்த் துறை பேராசிரியராக உள்ள உல்ரிக் நிக்லாஸ் தெரிவித்துள்ளாா்.
இதனைத் தடுத்து நிறுத்தி தமிழ்த் துறை தொடா்ந்தும் செயற்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை, உலக தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டு தமிழர்புலம் சார்பில் ”அயல்நாடுகளில் தமிழாய்வுகள்'“ என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் பேசும்போதே ஜேர்மனி - கொலோன் பல்கலை தமிழ் துறை பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் இதனைத் தெரிவித்தார்.
கொலோன் பல்கலைக்கழக தமிழ் துறையில் 40 ஆயிரம் தமிழ் நுால்களுடன் நுாலகம் உள்ளது.
இங்குள்ள தமிழ்த் துறையில், சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை ஆய்வுகள் இடம்பெறுகின்றன.
ஜேர்மனியில் உள்ள இலங்கை தமிழர்கள் உட்பட வெளிநாட்டினருக்கும், இந்தத் துறை தமிழ் கற்பித்து வருகிறது. இதுபோல், பல்வேறு சேவைகளை செய்து வரும் இந்த தமிழ்துறை, தற்போது மூடப்படும் சூழலில் உள்ளது. அதை மீட்டெடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது பேராசிரியா் வலியுறுத்தினாா்.
இந்நிலையில் இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் , அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க, 10 கோடி ரூபாவை தமிழக அரசு வழங்கியது. ஆனால் வெளிநாட்டு பல்கலைகழககங்களில் தமிழ் இருக்கை அமைப்பது உள்ளிட்ட தமிழ் சார்ந்த பணிகள், விரைவாக நடப்பதில்லை. இது குறித்து தமிழகத்தில் உள்ளவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் எனத் தெரிவித்தாா்.
தற்போதைய சூழலில், அனைத்து துறைகளிலும் 20 சதவீதம் செலவுகள் குறைக்கப்பட்டு உள்ளன. என்றாலும் வெளிநாடுகளில் தமிழ் புலங்களை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை செயற்படுத்த முடியும். கொலோன் பல்கலை தமிழ் துறை பிரச்சனை குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தாா்.