யாழ்ப்பாணம் தென்மராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட 24 வயதுடைய பெண், தன்னை அழைத்த நபர் உட்பட்ட மூவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆண் நண்பர்கள் அழைத்ததன் அடிப்படையில் அவர்களைச் சந்திப்பதற்காக சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்கள் இருவர் கொடிகாமம் பகுதிக்குச் சென்றிருந்தனர்.
அவ்வாறு சென்றவர்களை ஆண் நண்பர்கள் எனத் தெரிவிக்கப்படும் நபர்கள் வடமராட்ச்சி கிழக்குப் பகுதி நோக்கி அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அவர்கள் சென்ற காட்டுப் பகுதியில் வைத்து அழைத்துச் சென்றவர்கள் உட்பட்ட நால்வரால் அவர்கள் காட்டுப்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவ்வேளை அங்கு சென்ற இளம் பெண்களில் ஒருவர் கூச்சலிட்டவாறு அவர்களிடம் இருந்து தப்பி ஓடி மக்களின் துணையுடன் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படும் பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதால் பருத்தித்துறை மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்தியிருந்தனர். இருந்தபோதிலும் அவர்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்நிலையில் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண் நேற்று வீடு திரும்பியதாக பருத்தித்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பருத்தித்துறை பொலிஸார் குறித்த பெண்ணைச் சந்தித்து விசாரணைக்கு வருமாறு அழைத்திருக்கின்றனர்.
இன்று பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்திற்கு வந்த குறித்த பெண்,
தங்களை அழைத்த நபர்களின் அறிமுகம் தொலைபேசி ஊடாகவே கிடைத்தாகவும் அவர்கள் அழைத்ததன் அடிப்படையில் அங்கு சென்றபோது தம்மை அழைத்தவர்கள் உட்பட்ட நால்வர் தம்மைக் கடத்தியதாகவும் அவர்களில் தன்னை மூவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்டுத்தியதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்திருப்பதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி