பெண்குயின் திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், திரைப்படம் வெளிவர இருப்பது குறித்து தனக்கு பெரிய விடயமாக தோன்றவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி நேரடியாக ரிலீசாக இருக்கிறது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் அம்மா வேடத்தில் முதல் முறையாக பெண்குயின் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழ்த் திரை உலகில், அம்மா வேடம், அண்ணி வேடம் என்பவற்றில் ஒருதடவை நடித்துவிட்டால் முன்னணி நடிகைகளின் செல்வாக்கு குறைந்துவிடும் என்பதுடன் அதற்கு பின்னரான காலத்தில் அக்கதாபாத்திரங்களுக்கான நடிகையாகவே முத்திரை குத்திவிடும் வழக்கம் இருப்பதால் பெரும்பாலான நடிகைகள் இக்கதாபாத்திரங்களில் நடிக்க தயங்குவதுண்டு.
அந்த அடிப்படையில்தான் கீர்த்தி சுரேஷ் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண்குயின் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில் அது குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இப்படம் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி
புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்க காரணம்?
இப்படத்தின் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் புதுமுக இயக்குனர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. என்னிடம் கதையை 4.30 மணி நேரம் சொன்னார். கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் நினைத்ததை முடித்து காட்டினார். 10 படங்களுக்கு ஒர்க் பண்ண அனுபவம் அவரிடம் இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
அம்மா வேடத்தில் நடிக்க காரணம்?
கதை கேட்கும் போது எனக்கு அம்மா வேடம் பற்றி எதுவும் தோன்றவில்லை. இப்போது எல்லாரும் கேட்கும் போதுதான் அம்மா வேடம் பற்றி தோன்றுகிறது. கதை கேட்கும் போது ஏன் பண்ண கூடாது என்றுதான் மனதில் ஓடியது. நான் 10, 15 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கவில்லை. சின்ன குழந்தைக்கு தான் அம்மா வேடமாக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெரியதாக தோன்றவில்லை என கீர்த்தி சுரேஷ் பதிலளித்திருந்தார்.