பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் நீண்ட மூடலுக்குப் பின்னர் எதிா்வரும் 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
2-ஆம் உலகப் போருக்குப் பின்னா் ஈபிள் கோபுரம் மிக நீண்ட காலம் மூடப்பட்ட சந்தா்ப்பம் இதுவாகும்.
பிரான்ஸில் கொரோனா தொற்று நோய் நெருக்கடி குறைந்துள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் இதனைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோபுரம் மற்றும் அதன் சுற்றுச்சூழல்கள் துப்புரவு செய்யப்பட்டு தயாா் செய்யப்படுகின்றன.
324 மீட்டர் (1,063 அடி) உயரமுள்ள ஈபிள் கோபுரம் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட கொரோனா சமூக முடக்கல்களுடன் மூடப்பட்டது.
ஜூன் 25 ஆம் திகதி ஈபிள் கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டாலும் அங்கு குறைந்த எண்ணிக்கையானவா்களே உடனடியாக அனுமதிக்கப்படவுள்ளனா். அத்துடன் கோபுரத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் தளங்களுக்கு மட்டுமே மக்கள் செல்ல முடியும். அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு செல்ல முடியாது என கோபுர நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா கிளார் நேற்று செவ்வாயன்று கூறினார்.
ஈபிள் கோபுரத்தைப் பாா்வையிட வரும் 11 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.