நடிகர் ரஜினிகாந்த வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்தவர் 8ம் வகுப்பு மாணவன் எனத் தெரியவந்துள்ளது.
தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக பொலிசாருக்கு அவசர பொலிஸ் தொலைபேசி அழைப்பினூடாக நேற்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்ற விசேட அணி தேடுதலை மேற்கொண்டதில் அங்கு எவ்வித வெடிபொருட்களும் மீட்கப்படாததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
இருந்தாலும் அவ்வாறு வெடிகுண்டு புரளியை ஏற்படுத்திய மர்ம நபரை கண்டறியும் முயற்சியில் தமிழ்நாடு பொலிசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்த விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஒருவன் மிரட்டல் விடுத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பள்ளி மாணவன் மற்றும் அவனது தாயாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவனது தாய் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தான் கேட்டது கிடைக்காவிட்டால் செல்போனை வைத்து கொண்டு இதுபோல் மிரட்டல் விடுப்பதை மாணவன் வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரிய வந்தது. குறித்த செல்போனில் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கோல்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும், 108 எண்ணுக்கு அழைத்து மிரட்டல் விடுத்தது விசாரணையில் உறுதியானது. இதனை தொடர்ந்து, பள்ளி மாணவனுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.