வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர மோர்தசா உள்பட 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான மோர்தசாவுக்கு கடந்த வியாழக்கிழமை முதல் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று (ஜூன்-20) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மோர்தசா டாக்காவில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மோர்தசாவின் மாமியார் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பாலின் அண்ணனும், முன்னாள் வீரருமான நபீஸ் இக்பால் (34 வயது) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிட்டகாங்கில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக வங்காளதேச அணிக்காக விளையாடி வரும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் 28 வயதான நஸ்முல் இஸ்லாமும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.
வங்காளதேசில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆயிரத்து 425 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 775 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலகளாவிய கொரோனா பாதித்த நாடுகள் வரிசையில் 17வது இடத்தில் உள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19)