யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுராழ்வார் கோவிலுக்குள் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்த நபர்களால் 14 நாட்களுக்கு பொதுமக்கள் வழிபாட்டிற்காகச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரிகள் பணிமனையினர் குறித்த அறிவிப்பினை இன்று விடுத்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைச் சேர்ந்த சுகாதார உத்தியோகத்தர்கள் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்றிருக்கின்றனர். அவ்வேளை ஆலய வளாகத்திற்குள் ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வழிபாடாற்றியவண்ணம் இருந்திருக்கின்றனர்.
பூசகர்கள் உட்பட்ட எவரும் முகக் கவசம் அணியாமல் சுகாதார சேவைகள் பிரிவினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் நெருக்கமாகக் காணப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையல் ஒருவாரம் அவகாசம் வழங்கிய அவர்கள் அடுத்த வாரத்திற்கு இடையில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
இன்றும் காலையும் இதே அறிவுறுத்தல் சுகாதார உத்தியோகத்தர்களால் நினைவுபடுத்தப்பட்டிருக்கின்றது. ஆனாலும் மதிய வேளையில் நடைபெற்ற வழிபாட்டின் போது எவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியிருக்கவில்லை என்பதுடன்,
தொண்டை நோ, காய்ச்சல் உட்பட்ட நோய் அறிகுறிகளுடன் காணப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் ஒருவர் சுகாதாரத் திணைக்களத்தினரிடம் பணி விடுப்புப் பெற்று வந்திருந்தபோதிலும் ஆலயத்தில் சுவாமி வாகனம் தூக்கியமை அவதானிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அவருடன் வாகனம் தூக்கியவர்களை தனிமைப்படுத்த ஒத்துழைக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டபோதிலும் மூவர் தவிர்ந்த ஏனையவர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றிருக்கின்றனர்.
15 இற்கும் மேற்பட்டவர்கள் வாகனம் தூக்கியபோதிலும் அவர்கள் அங்கிருந்து சென்றவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டியவர்கள் என்பதை சுட்டிக்காட்டிய சுகாதார உத்தியோத்தர்கள் நாளைக்கு இடையில் அவர்களை அடையாளப்படுத்தினால் ஆலயத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 15 நாட்களுக்கு நிர்வாகத்தினர், பூசகர்கள் உட்பட்ட ஐவருக்கு மட்டும் ஆலயத்தில் பூசை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார உத்தியோகத்தர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி