பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கூண்டோடு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செல்லவிருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன்-24 ஆம் திகதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனையில், ஷதாப் கான், ஹைதர் அலி ஹரிஷ் ரவுப் ஆகிய மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மொஹமட் ஹபீஸ் மற்றும் வாஹாப் றியாஸ் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் ஏழு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவரும் அதிரடி ஆட்டக்காரருமான அப்ரிடிக்கு கொரோன தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இதுவரை ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரத்து 695 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் உலகளாவிய கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட நாடுகள் வரிசையில் 14 வது இடத்தில் உள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்