தமிழ்நாடு திருச்சி கே.கே.நகர் பகுதியில் திடீரென அதிகரித்திருக்கும் கொரோனா தொற்று பரவலால் அங்கு அதிகமாக வசித்து வரும் ஈழத்தமிழர்களிடத்தே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கானது சென்னை மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மீண்டும் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் மையமாக விளங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கே.கே.நகர் பகுதியில் அதிகளவான கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளது.
கே.கே.நகர் பகுதிக்குட்பட்ட கிருஸ்ணமூர்த்தி நகரில் வசிக்கும் ஒருவர் சென்னைக்கு சென்று திரும்பிய நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எல்.ஐ.சி.கொலணி பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் அதிகளவானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
காவலர் குடியிருப்பில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அக்குடியிருப்பிற்குள் நுழையும் இரு பாதைகளும் மூடப்பட்டு அப்பகுதிக்கு யாரும் செல்லவோ வெளியேறவோ முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு சுமார் நாற்பது பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் தவிர்த்து வெளிப்பதிவில் பல ஈழத்தமிழர்கள் தங்கியுள்ளார்கள். அவ்வாற இருப்பவர்களில் கணிசமானவர்கள் திருச்சி மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். திருச்சி கே.கே.நகர் பகுதியில் அதிகளவான ஈழத்தமிழர்கள் வீடுகளை வாடகைக்கு பெற்று இவ்வாறு தங்கியுள்ள நிலையில் அங்கு திடீரென கொரோனா தொற்று அதிகரித்திருப்பது அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே எவ்வி உரிமைகளும் இன்றி மாற்றாந்தாய் மனப்பாண்மையில் நடத்தப்பட்டு வரும் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் எவ்வாறு நடத்துவார்களோ என்ற கவலையே இவ் அச்சத்துக்கு காரணமாகும் என அவர்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று (ஜூன்-23) திருச்சி மாவட்டத்தில் 40 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 352 பேருக்கு கொரோனா தொற்று எற்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை, தமிழ்நாடு