அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் 35 அமெரிக்க அரசியல், பாதுகாப்பு துறைசாா் அதிகாரிகளைக் கைது செய்ய ஈரான் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இவா்களைக் கைது செய்வதற்கு இன்ரபோல் பொலிஸாரின் உதவியையும் ஈரான் கோரியுள்ளது.
ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி கொலைக் குற்றச்சாட்டில் இவா்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெஹ்ரான்அரசு வழக்கறிஞர் அலி அல்காசிமெர் நேற்றுத் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் ஈராக்கில் வைத்து அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் மூலம் ஈரானிய குட்ஸ் படையணித் தளபதியான காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் கொலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கை குற்றச்சாட்டில் ட்ரம்ப் உள்ளிட்ட 36 பேருக்கு எதிராக ஈரானிய நீதித்துறை பிடியாணை பிறப்பித்துள்ளதாக அல்காசிமெர் கூறினார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளவா்களில் அமெரிக்க இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் அடங்குவதாகவும் தெரிவித்த அல்காசிமெர், இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
இதேவேளை, ஈரானின் இந்தப் பிடியாணை அரசியல் பிரச்சார நடவடிக்கை என சவுதி அரேபியாவில் இடம்பெற்ற செய்தியாளா் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அமெரிக்க ராஜதந்திரி பிரையன் ஹூக் கூறினார்.
இதேவேளை, ட்ரம்ப் உள்ளிட்ட 36 பேரைக் கைது செய்ய உதவக் கோரும் ஈரானின் கோரிக்கையை இன்ரபோல் நிராகரித்துள்ளது.
அரசியல், இராணுவ, மத அல்லது இன அடிப்படையிலான சிக்கல்களில் தலையீடு்களைச் செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என இன்ரபோல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதிக்குரிய ராஜதந்திர சிறப்புரிமையை ட்ரம்ப் இப்போது கொண்டிருக்கும் நிலையில் அவரை உடனடியாகக் கைது செய்ய முடியாவிட்டாலும் அவா் பதவி விலகிய பின்னரும் கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என தெஹ்ரான்அரசு வழக்கறிஞர் அலி அல்காசிமெர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொலை செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் போா் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது.
அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் படைத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.