சீனாவின் தலைநகா் பீஜிங்கில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அங்கு தொற்று நீக்கி தெளிப்பதற்கு சிறிய ரக பவள் கவச வாகனம் போன்றதொரு ரோபோ பயன்படுத்தப்படுகிறது.
பீஜிங்கின் - பெங்டாய் மாவட்டத்தில் உள்ள புதிய கொரோனா தொற்று பரவல் மையமான ஜின்பாடி மொத்த விற்பனைச் சந்தைக்கு அருகில் உள்ள பகுதிகளில் தொற்று நீக்கி விசிறும் பணியில் இந்த ரோபோ டாங்கி ஈடுபட்டுள்ளது.
மணிக்கு 5 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த சிறிய ரோபோ டாங்கி, ஒரு மணித்தியாலத்தில் 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் தொற்று நீக்கம் செய்யும் திறன் கொண்டது.
இந்த டாங்கியில் பீராங்கி வடிவில் பொருத்தப்பட்டுள்ள குழாயில் சிறிய துவாரங்கள் உள்ளன. அந்தக் குழாய் பல கோணங்களிலும் திரும்பி தொற்று நீக்கியை விசிறக் கூடியது.
இவ்வாறான இரண்டு ரோபோ டாங்கிகள் கடந்த 22 ஆம் திகதி பெங்டாய் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறான ஒரு ரோபோவை உருவாக்குவதற்கு 66,000 யுவான் ($9,326) வரை செலவாகும் என இதன் தயாரிப்பாளா்கள் கூறியுள்ளனா்.
தேவைக்கேற்ப உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இவற்றைச் சந்தைப்படுத்த தயாராக உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா