தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாணத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சத்தம் சந்தடியில்லாமல் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 7 பேரும், முல்லைத்தீவில் நேற்று ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் நடைபெறும் இந்தக் கைதுகள் மக்கள் மத்தியில் பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
"எமக்குப் 13 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன. கிளிநொச்சியிலிருந்து 12 முறைப்பாடுகளும் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். அவர்களை நாம் நேரில் பார்வையிட்டோம். சிலர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றார்கள்" என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், ஜெயபுரம், வன்னேரிப் பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவைச் சேர்ந்த இளைஞர் ஒருவனும் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் இந்தத் திடீர் கைதுகள் தொடர்பில் வட மாகாணத்தில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சமேற்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு