இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு அதிகூடிய உயிரிழப்பு பதிவாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 17 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது.
காலை 8.00 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 653 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் 507 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை ஐந்து இலட்சத்து 85 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்து.
கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை என்றும் இல்லாத வகையில் அதிகூடிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் 507 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 7 ஆயிரத்து 855 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அடுத்ததாக தமிழ்நாட்டில் 90 ஆயிரத்து 167 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 1201 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு புது டெல்லியில் கொரோனா தொற்றாள்களது எண்ணிக்கை கடந்த சில நாட்களாக திடீர் அதிகரிப்பை வெளிப்படுத்தி வருகிறது. 2 ஆயிரத்து 742 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 87 ஆயிரத்து 360 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. குஜராத்திலும் ஆயிரத்து 848 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32 ஆயிரத்து 446 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை 3 இலட்சத்து 47 ஆயிரத்து 979 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 2 இலட்சத்து 20 ஆயிரத்து 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, புது தில்லி