அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை 47 ஆயிரத்துக்கு அதிகமானவா்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான மிக அதிகளவான தொற்று நோயாளா் தொகை இதுவாகும்.
கலிஃபோர்னியா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா ஆகிய பகுதிகள் அமெரிக்காவின் புதிய தொற்று நோய் மையங்களான உருவெடுத்துள்ளன. அங்கு அதிா்ச்சியளிக்கும் வகையில் தொற்று நோய் அதிகரித்து வருகிறது.
நாங்கள் இப்போது முழுமையாகக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம். நிலைமை இன்னும் மோசமாகப்போகிறது. தொற்று நோயாளா்கள் எண்ணிக்கை விரைவில் இரட்டிப்பாகும் போக்கு தென்படுகிறது. அது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன் என செனட் குழுவிடம் அரசாங்கத்தின் தலைமை தொற்று நோயியல் நிபுணா் அந்தோனி பாசி தெரிவித்துள்ளார்.
அதிகரித்துவரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் என்ற அளவுக்கு தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் பாசி எச்சரித்துள்ளார்.
தொற்று நோய் தற்போது அதிகரித்துள்ள பகுதிகள் குறித்து மட்டும் நாங்கள் கவனம் செலுத்த முடியாது. முழு நாடுமே ஆபத்தில் உள்ளது எனவும் அவா் கூறினாா்.
ஆரம்பகால தகவல்கள் நம்பிக்கையளித்தாலும் கூட தற்போதைய நிலையில் தொற்று நோய்க்கான தடுப்பூசிக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே மருந்து கிடைக்கலாம் என நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டாா்.
அமெரிக்காவில் இதுவரை 26 இலட்சத்துக்கு அதிகமானவா்கள் கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 126,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா