உலகின் இரண்டாவது அதிக தொகை அரிசி மற்றும் கோதுமை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா அதன் 9 மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க ஹெலிகப்டா்கள் மற்றும் 12 ஆளில்லா சிறிய ரக விமானங்களைக் களமிறக்கியுள்ளது.
கடந்த வார இறுதியில் தலைநகர் புதுடெல்லியின் உள்ள குருகிராம் நகரத்தில் வெட்டுக்கிளிகள் பெருந்தொகையில் படையெடுத்து பயிா்களை அழித்து நாசம் செய்தன. இதனைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசு மீது கடும் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களில் பொருத்தக்கூடிய தெளிகருவிகளை பிரிட்டனில் இருந்து பெற்று நிறுவுமாறு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என இந்திய விவசாய மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இந்தியா பல தசாப்தங்காள பாலைவன வெட்டுக்கிளியின் மோசமான தாக்கங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வெட்டுக்கிளிகளைக் கண்காணிக்கவும், பூச்சிக்கொல்லிகளை தெளிக்கவும் ஹெலிகப்டா்களையும் ஆளில்லா சிறிய ரக விமானங்களையும் களமிறக்க நிா்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏதுவான இரவில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த வழி செய்யும் வகையில் தனது விதிகளில் இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திருத்தங்களைச் செய்துள்ளது.
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்களில் 9 மாநிலங்களில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பூச்சி கொல்லி மருந்துகளைத் தெளிக்க இந்தியா ஏற்கனவே சிறப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது.
எனினும் மேலும் தீவிர நடவடிக்கையை எடுக்கும் வகையில் ஹெலிகப்டா்கள் மற்றும் 12 ஆளில்லா சிறிய ரக விமானங்களைக் களமிறக்கியுள்ளது.
இதேவேளை, பிராந்தியத்தில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடா்பில் இந்தியா, ஈரான், பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் வாரந்தோறும் பேச்சுவாா்த்தைகளை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சோமாலியில் இருந்து இந்தியப் பெருங்கடல் நோக்கி புதிய வெட்டுக்கிளிகள் வருவதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.