ஹொங்கொங் தொடா்பான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் சீனா திருத்தம் செய்துள்ள நிலையில் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தப்பியோடி வருபவா்களுக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் புதிய அலுவலகம் ஒன்றை தாய்வான் இன்று புதன்கிழமை திறந்துள்ளது.
சீனாவில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஹொங்கொங்கின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு தொடா்ந்து ஆதரவு வழங்கப்படும் என தாய்வான் அரசின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவா் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள சீனாவின் திருத்தப்பட்ட பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து பிரிவினையை ஊக்குவித்தல், தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்தல், தேசியக் கொடி, தேசிய கீதத்தை அவமதித்தல் உள்ளிட்டவை தண்டணைக்குரிய குற்றமாகக் கருதப்படும். இத்தகைய குற்றங்களுக்கு சிறைவாசம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கும் சரத்துக்கள் புதிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஹொங்கொங்கின் தன்னாட்சி கோரும் அரச எதிா்ப்புப் போராட்டங்களுக்கு தாய்வான் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையிலேயே புதிய சட்டத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தப்பியோடுவோருக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் புதிய அலுவலகம் ஒன்றை தாய்வான் இன்று திறந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதில் இருந்து சுமார் 200 ஹொங்கொங் வாசிகள் ஏற்கனவே தாய்வானுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
தைப்பே நகரத்தில் இன்று ஹொங்கொங்கியா்களுக்காக புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசிய தைவானின் சிரேஷ்ட அரச தலைவா்களின் ஒருவரான சென் மிங்-டோங், புதிய அலுவலகம் ஹொங்கொங் மக்களுக்கு உதவும் தாய்வானின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது எனத் தெரிவித்தார்.
ஹொங்கொங்கின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை ஆதரிக்கும் தாய்வான் அரசாங்கத்தின் கொள்கைகளின் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் சென் கூறினார்.
தாய்வானை தனது முழுமையான ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை பீஜிங் தொடா்ந்து வரும் நிலையில் அதற்கு தனது எதிா்ப்பை தாய்வான் தொடா்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது.
பீஜிங்குடன் தாய்வான் கொண்டுள்ள விரோதப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.