இந்தியாவில் கடந்த 50 வருடங்களில் சுமாா் 4 கோடி 58 இலட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை, உலகளவில், 1970 - 2020 வரையிலான, 50 ஆண்டுகளில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்து 14.26 கோடியாக அதிகரித்துள்ளது. இது 1970-ஆம் ஆண்டு நிலவரப்படி6.10 கோடியாக இருந்தது எனவும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச மக்கள் தொகை குறித்து ஐக்கிய நாடுகள் சபை மக்கள் தொகை நிதியம் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசவத்திற்கு முன் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்தால் கருக்கலைப்பு செய்வது, பிரசவத்திற்குப் பின் இறக்கும் பெண் குழந்தைகள் ஆகியோரும் காணாமல் போன பெண்கள் பட்டியலில் இடம் பெறுவர்.
இந்த வகையில் இந்தியாவில், கடந்த 50 ஆண்டுகளில் 4.58 கோடி பெண்கள் காணாமல் போயுள்ளனர். இது சீனாவில் 7.23 கோடியாக உள்ளது.
கடந்த, 2013-17 வரை இந்தியாவில் ஆண்டுக்கு 4.60 இலட்சம் பெண் குழந்தைகள் வீதம் பிறந்தவுடன் மாயமாகியுள்ளனர். இதில் மூன்றில் இரு பங்கினர் பாலின பாகுபாடு காரணமாகவும் ஒரு பங்கினர் பிறந்த பின்னரும் இறப்பை தழுவியுள்ளனர்.
உலகளவில் வருடத்துக்கு 12 முதல் 13 இலட்சம் பெண் சிசுக்கள் பாலின பாகுபாடு காரணமாக கருவிலேயே கலைக்கப்படுகின்றன. அதில் இந்தியா மற்றும் சீனாவின் பங்கு, 90-95 சதவீதம். அதே சமயம் இந்த இரு நாடுகளில் தான் பிறப்பு விகிதமும் அதிகமாகும்.
இந்தியாவில் தான் பெண் சிசுக்களின் இறப்பு அதிகம் என ஆய்வாளர் அல்கெமா 2014இல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆயிரம் பெண் குழந்தைகள் பிறந்தால் அதில், 13.5 குழந்தைகள் இறக்கின்றன. அதிலும் ஐந்து வயதிற்குட்பட்ட ஒன்பது பெண் குழந்தைகள் இறந்தால் அதில் ஒரு குழந்தை பிரசவத்திற்குப் பின் பாலின பாகுபாடு காரணமாக உயிரிழக்கிறது என ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.