கிளிநொச்சி மாவட்டமானது தற்போது கல்வியில் கணிசமானஅளவு வளர்ச்சி கண்டு வருகின்றபோதும் இலங்கையின் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாகவே காணப்படுகின்றது. இதனை முன்னேறுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என மாவட்ட அரச அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று (02) பகல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றும் போது கொரோனா காலத்தில் கூடுதலான சிறுவர்கள் வியாபாரம் உள்ளிட்ட தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது பாடசாலைகளில் சமுக இடைவெளி பேணப்படுவதுடன் முகக்கவசங்களை அணிந்தும் கைகளை கழுவி உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.
சமுகத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதை எல்லோரும் உணர்ந்து தங்களது சேவைகளை வழங்கவேண்டும். சிறுவர் அபிவிருத்தி குழுவின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் அது தொடர்பான கிராம மற்றும் பிரதேச மட்ட கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கமுடியும் எனக் குறிப்பிட்ட அவர் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி கணிசமானளவு முன்னேற்றத்தை கண்டாலும் இலங்கையில் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாகவே காணப்படுகின்றது. இதனை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆசிரியர்கள் பெற்றோர்கள் தமது பணிகளை தொடரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி கலந்துரையாடலில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகதர்தர், வைத்திய அதிகாரிகள், பொலிஸ்அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி