யாழ். மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறிய 373 வழக்குகள் அதிகார சபையினால் பதியப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரியும் வட மாகாண பதில் உதவிப் பணிப்பாளருமாகிய அப்துல் லத்தீப் ஜஃபர் ஸாதிக் தெரிவித்துள்ளார்.
காலாவதி, விலைப்பட்டியலின்மை, உத்தரவாதம் இன்மை, இறக்குமதி விபரமின்மை, எஸ்.எல்.எஸ். தரச்சான்றுதல் இன்மை, கட்டுப்பாட்டு விலையினை மீறியமை, பொறிக்கப்பட்ட விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பான காரணங்களுக்காக இவ்வழக்குகள் பதியப்பட்டன எனவும் அவர் கூறினார்.
2020 அரையாண்டு காலப்பகுதியில் யாழ் மாவட்ட எல்லைக்குட்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் ஜனவரி மாதம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 102 வழக்குகளுக்கு ரூபா 4 இலட்சத்து 97 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டது.
பெப்ரவரி மாதம் 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 78 வழக்குகளுக்கு தண்டப்பணமாக ரூபா 3 இலட்சத்து 57 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டது.
மார்ச் மாதம் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 வழக்குகளுக்கு தண்டப்பணமாக ரூபா 1 இலட்சத்து 64 ஆயிரம் அறவிடப்பட்டது.
ஏப்ரல் மே மாதங்களில் கோவிட்-19 தொற்று காரணமாக வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.
யூன் மாதம் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 வழக்குகளிற்கு தண்டப்பணமாக ரூபா 4 இலட்சத்து 18 ஆயிரம் அறவிடப்பட்டது எனவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரியும் வட மாகாண பதில் உதவிப் பணிப்பாளருமாகிய அப்துல் லத்தீப் ஜஃபர் ஸாதிக் தெரிவித்துள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்