துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி தொடர்பாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த 20 பேர் துருக்கி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
விசாரிக்கப்பட்டவர்களில் கஷோக்ஜி திருமணம் செய்துகொள்ளவிருந்த துருக்கியைச் சேர்ந்த பெண்ணான ஹாதிஜா ஜெங்கிசும் அடங்குகிறார்.
பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சவுதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஒக்டோபர் 2-ஆம் திகதி துருக்கி - இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் நுழைந்த அவா் அதன் பின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. துணைத் தூதரகத்தின் உள்ளே வைத்து, ஜமால் கஷோக்ஜியை சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு குழு கொலை செய்தது.
இந்நிலையில் அவரது கொலை தொடா்பில் துருக்கி நீதிமன்றில் விசாரணைகள் இடமபெற்று வருகின்றன. தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் இரண்டு பேர் சவுதி பட்டத்து இளவரசர் சல்மானின் முன்னாள் உதவியாளர்களாவர். தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இவர்கள் மறுத்துள்ளனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தங்கள் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற துருக்கியின் கோரிக்கையை முன்பு நிராகரித்த சவுதி அரேபியா, கடந்த ஆண்டு இந்த கொலை தொடர்பாக எட்டு பேருக்கு தண்டனை வழங்கியது.
ஜமால் கஷோக்ஜி கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக 5 பேருக்கு மரண தண்டனையும், குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டில் மூன்று பேருக்குச் சிறை தண்டனையையும் சவுதி அரேபியா விதித்தது குறிப்பிடத்தக்கது.