"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப்புலிகளே உருவாக்கினார்கள். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தனை புலிகளின் தலைவர் பிரபாகரனே நியமித்தார்.
கருணா அம்மான் மட்டக்களப்பில் ஆற்றிய உரை இதற்கு ஆதாரமாக இருக்கின்றது. எனவே, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றழித்த கருணா அம்மானுடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் அரசு உடன் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்."
- இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"அம்பாறையில் கருணா அம்மான் ஆற்றிய உரை பாரதூரமானது. 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொன்றதாக அவர் தெரிவித்துள்ளமை மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றமாகும். எனவே, மனிதப் படுகொலையுடன் தொடர்புபட்ட சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசு தாமதம் காட்டக்கூடாது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பில் மட்டக்களப்பில் கருணா அம்மான் உரையாற்றியுள்ளார். அந்த உரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப்புலிகளே உருவாக்கினார்கள் எனவும், கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தனை புலிகளின் தலைவர் பிரபாகரனே நியமித்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, பயங்கரவாதிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பயங்கரவாத அமைப்பே ஆகும். இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் சம்பந்தன் தலைமையிலான உறுப்பினர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அரசு உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்.
பயங்கரவாதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசு ஒருபோதும் பேச்சு நடத்தக்கூடாது. அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்து தமது நற்பெயரை அரசு காப்பாற்றிக்கொள்ள வேண்டும்" - என்றார்.