"எமது சம்மதம் இன்றி எம்மை எவரும் ஆட்சி செய்ய முடியாது. புதிய ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்லில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை தம்பலகாமம் கோட்டத்தினருக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை தம்பலகாமத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தம்பலகாமம் கோட்டத் தலைவர் க.பாஸ்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
முதன்மை வேட்பாளரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அங்கு உரையாற்றுகையில்,
"கந்தளாய் குளத்தை வைத்து வெளிமாவட்டத்தவர்கள் குடியேற்றப்பட்டார்கள். கந்தளாய் குளத்து நீரை நம்பி நீங்கள் குடியேற வேண்டாம் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், குடியேற்றம் தொடர்ந்து அப்போதைய அரசால் மேற்கொள்ளப்பட்டது. 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றம் சென்றபோது இது பற்றி அங்கு பேசியிருக்கிறேன். இதற்கான பதிவுகள் அங்கு இருக்கின்றன.
தம்பலகாமம், பட்டணமும் சூழலும், முதலிக்குளம் உதவி அரச அதிபர் பிரிவுகளுக்கு இடையே நல்ல தொடர்பு அப்போது இருந்தது. தமிழ் மக்கள் கரையோரப் பிரதேசங்களில் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்றனர். இது மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஏனைய பிரதேசங்களிலும் கணிசமான அளவு அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் கொண்டு நடத்த வேண்டும்.
பெரும்பான்மை மக்களை நாங்கள் எதிரிகளாகக் கொள்ளக்கூடாது. இந்த விடயத்தில் தந்தை செல்வா இறுக்கமான கொள்கையைப் பின்பற்றி இருந்தார். அவர்கள் எங்களது எதிரிகள் இல்லை. பெரும்பான்மை இனத் தலைவர்களோடு நாம் பகைக்க முடியாது. நீதியின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம், பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் என்பன காலத்துக்குக் காலம் ஏற்படுத்தப்படபோது தமழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. இதனைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் தொடர்ந்து முனைனய வேண்டும்.
எம் மீது எவரும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது; எம் மீது வலிந்து ஆட்சி அதிகாரத்தைத் திணிக்க முடியாது. எமது சம்மதம் இன்றி எம்மை எவரும் ஆட்சி செய்ய முடியாது. நாம் சுதந்திரமாக வாழப் பலமாக இருக்க வேண்டும். எனவே, தமிழ் மக்கள் சிந்தித்து தீர்வைப் பெற்றுத்தரத்தக்க விதமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தங்களது ஆதரவை வழங்க வேண்டும்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை, கிழக்கு மாகாணம்