மத்திய கிழக்கில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொல்லப்பட்ட நிலையில், அவர்களது சடலங்கள் இன்று விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன என்று விமான நிலையத்தின் சுகாதார வைத்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று கட்டாரிலிருந்து வந்த விமானத்தில் 7 இலங்கைப் பிரஜைகளின் சடலங்கள் காணப்பட்டன எனவும், அவற்றில் ஒரு சடலம் தற்கொலை செய்து கொண்ட நபரொருவருடையது எனவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வைத்தியப் பிரிவின் பேச்சாளர் மதுக விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.266 என்ற விசேட விமானம் மூலம் குறித்த 7 சடலங்களும் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் நால்வர் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளனர் எனவும், ஏனைய மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் விமான நிலையத்தின் வைத்தியப் பிரிவின் பேச்சாளர் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் முதலாம் திகதி இந்தக் கொலைகள் பதிவாகியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக உடல்களை நாட்டுக்குக் கொண்டுவர கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகியுள்ளன.
கொல்லப்பட்ட மூவரும் களனி பியகம வீதி, விகாரையை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை சடலங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 59 வயதுடைய கணவனும், அவரது மனைவியான 55 வயதுடைய பெண்ணும், 34 வயதுடைய இவர்களுடைய மகளும் ஆவர். இவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, மேற்கு மாகாணம், கொழும்பு