கடற்படை சிப்பாய் உள்ளிட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இன்று ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாதக்காலமாக கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கடந்த தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று நண்பகல் உறுதி செய்யப்பட்டது.
அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே ஈரானில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கு தொற்று உறுதியானதாக காலையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2151 ஆக அதிகரித்திருந்தது.
இந் நிலையில் கட்டார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிய தலா ஒருவர் மற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் என தற்போது தொற்றுக்கு உள்ளான மூவருடன் சேர்த்து அவ் எண்ணிக்கை 2154 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 12 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை குணமடைந்தவர்களது எண்ணிக்கை 1979 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 894 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதுடன் தற்போது 164 பேர் நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை