விலங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் வைரஸ் நோய்களை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கொரோனா போன்ற நோய்கள் அதிகளவில் பரவும் என ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
“அடுத்த தொற்றை தடுத்தல்: விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்கள் மற்றும் அதன் பரவலைத் தடுத்தல்” என்ற தொனிப்பொருளில் சமா்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான சமநிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் இவ்வகை நோய்கள் பரவுகின்றன என இந்த ஆய்வறிக்கை குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் அறிவியல் ஆய்வுக்கான தலைவர் மார்டென் கபெல் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்களில் மிகவும் மோசமான ஒன்றே தவிர, முதல் முறையாக ஏற்பட்டுள்ள கொடிய நோய் அல்ல. இதற்கு முன்பு எபோலா, சார்ஸ், மெர்ஸ், எச்ஐவி, லைம், ரிப்ட் வேலி காய்ச்சல், லாசா காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்களும் உலகில் பரவியுள்ளன என ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் பொதுச் செயலாளரும், நிர்வாக இயக்குநருமான இங்கர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
1996ல் பறவை காய்ச்சல், 1998ல் நிபா வைரஸ், 2003ல் சார்ஸ், 2016ல் பன்றி காய்ச்சல் என அனைத்தும் சீனாவில் இருந்து தோன்றியதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காடுகளையும், இயற்கை வளங்களையும் அழிப்பதை நாடுகள் நிறுத்த வேண்டும். விவசாயத்தை பாதுகாத்து, மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். கொரோனா தொற்றின் மூலம் இயற்கை இதனை நமக்கு எச்சரித்துள்ளது. தொற்று ஏற்படும் என்று உணர்ந்த நாம், அதனை எதிர்கொள்ள தயாராகவில்லை. ஆனால் இப்போது, அடுத்த தொற்று பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.