கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்ட ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்த நிலையில் அதனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது.
ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் அனுமதி பெற்றிருந்த நிலையில் இந்திய-பாகிஸ்தான் இடையேயான விரிசல் நிலை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் முற்றிலுமாக நீங்காத சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட ஆசிய கிண்ண போட்டிகளை அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உரிமத்தை பாகிஸ்தான் இலங்கையிடம் கொடுத்துவிட்டு, 2022 தொடரை நடத்தும் உரிமத்தை விரும்பினால் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஏற்றுகொள்ளும் பட்சத்தில் அடுத்த வருடம் நடைபெறும் ஆசிய கிண்ண போட்டிகள் இலங்கையில் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை