மொனராகலை மாவட்டம் புத்தல பகுதியில் திடிரெனப் பெய்த மழையால் வயலோரம் உள்ள மரத்தில் கீழ் ஒதுங்கிய இளைஞனின் சட்டைப் பையில் இருந்த கைத்தொலைபேசியில் மின்னல் தாக்கியதில் அந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் புத்தல - உவா - பெல்வத்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வயல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞனும் அவரது தாயாரும் திடீரென மழை பெய்ததால் வயலோரம் இருந்த மரத்தின் கீழ் ஒதுக்கியபோது இளைஞனின் சட்டைப் பையில் இருந்த கைத்தொலைபேசியில் மின்னல் தாக்கியது.
இதனையடுத்து அந்த இளைஞன் திடீரென நிலத்தில் விழுந்து அசைவின்றிக் கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோதும் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
புத்தல - உவா-பெல்வத்த பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
இறந்தவரின் சடலம் வெல்லவாய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதச பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வுத் மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. மின்னல் தாக்கம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.