இலங்கையில் ஓய்ந்து போய்க் கொண்டிருந்த கொரோனா மீண்டும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியதை அடுத்து இன்று ஒரே நாளில் 296 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து இதுவரையான நாட்களில் என்றும் இல்லாத வகையில் அதிகூடிய தொற்றாக் இன்றைய நிலை பதிவாகியுள்ளது.
இன்று கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ள 283 பேருக்கு ஏற்கனவே தொற்று உறுதியாகியிருந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இதுவரை 339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும், பி.சி.ஆர் பரிசோதனை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இருந்து வருகை தந்த ஒருவர், இந்தியாவில் இருந்து வருகை தந்த 9 பேர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து திரும்பிய 3 பேர் என 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களது மொத்த எண்ணிக்கை 2450 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, 449 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை