"ஜெனிவாவில் பொறியிலிருந்து இராணுவத்தைக் காப்பாற்ற படித்த, அறிவுள்ள அதேபோல் நாட்டையும் நேசிக்கக்கூடிய அரசியல்வாதிகளையே சிங்கள மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும்."
- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"படித்த புத்திஜீவிகள் மட்டுமே நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இக்கருத்துடன் நான் உடன்பாடிவில்லை. அதனை நிராகரிக்கின்றேன். ஏனெனில் படித்த - அறிவுள்ள அரசியல்வாதிகள்தான் நல்லாட்சியின்போது நாட்டைப் பிளவுபடுத்தும் அரசமைப்பை முன்வைத்தனர். சமஷ்டிக்கான தீர்வுத் திட்டத்தையும் கொண்டு வந்திருந்தனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் தாரைவார்த்தனர். அதுமட்டுமல்ல இராணுவத்தினரை ஜெனிவாவில் காட்டிக்கொடுத்தனர்.
எனவே, படித்த, அறிவுள்ள அதேபோல் நாட்டையும் நேசிக்கக்கூடிய அரசியல்வாதிகளையே தெரிவுசெய்து, மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். அவ்வாறு அனுப்பினால் அவர்கள் ஒருபோதும் தாய் நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக்கொடுக்கமாட்டார்கள் என்பதுடன், நாட்டைப் பிளவுபடுத்தக்கூடிய அரசமைப்புக்கு ஆதரவாக கை உயர்த்தமாட்டார்கள்.
எனவேதான் படித்த, அறிவுள்ள தாய் நாட்டை நேசிக்ககூடியவர்களை நாடாளுமன்றம் அனுப்புமாறு கோரி வருகின்றோம். எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை சிங்கள மக்கள் வழங்குவார்கள் என நம்புகின்றேன்" - என்றார்.