கொரோனா தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி கட்சி 83 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது
எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது.
சிங்கப்பூரில் கடந்த 1959-ம் ஆண்டிலிருந்து மக்கள் செயல் கட்சியே தொடா்ந்து ஆட்சியைத் தக்கவைத்துவரும் நிலையில் இம்முறையும் அந்தக் கட்சிக்கே மக்கள் வாக்களித்துள்ளனர்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங் தலைமையிலான அரசின் ஆட்சிக் காலம் இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே தோ்தல் நடத்தப்பட்டது.
தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் சுகாதார-பாதுகாப்பு வழிகாட்டல்களும் தோ்தல் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த தேர்தலில் 880 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தைத் தவிர்க்க இந்தத் தேர்தலில் 1,100 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. மக்கள் வாக்களிக்கவும் கூடுதலாக 2 மணிநேரம் வழங்கப்பட்டது.
மக்கள் முகக்கவசம் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகளை அணிந்து வாக்காளர்கள் வாக்களித்தனர்
இந்நிலையில் மக்கள் செயல் கட்சியை அதிகமான பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு பிரதமர் லீ சியன் லுங் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியை நாங்கள் பொறுப்புடன் பயன்படுத்தி கொரோனாவுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடுவதுடன், பொருளதார நெருக்கடியிலிருந்து நாட்டையும், மக்களையும் மீட்க உழைப்போம் எனவும் அவர் கூறினார்.
மூத்த அமைச்சர்கள் சண்முகரத்தினம், க.சண்முகம், டியோ சீ ஹியன் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து சிங்கப்பூரை நெருக்கடியிலிருந்து மீட்போம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, முன்னொருபோதும் இல்லாத வகையில் பத்து இடங்களை தொழிலாளர்கள் கட்சிப் பிடித்ததுள்ளது அக்கட்சிக்கு வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் இரு தொகுதியில்லா உறுப்பினர்கள் என மொத்தம் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.