பிரேசிலில் இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் காடழிப்பு சுமார் 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூா்வ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் சுமார் 3,069 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அமேசான் காடுகள் பிரேசிலில் அழிக்கப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்டுவரும் தரவுகளின் பிரகாரம் இது மிகவும் அதிகரித்த காடழிப்பு வீதமாகப் பதிவாகியுள்ளதாக நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (INPE) தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மட்டும் 1,034 சதுர கிலோ மீட்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் அந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார நலன்களைக் காரணமாகக் கூறி பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வேகமாக மழைக்காடுகளை அழித்து வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அத்துடன், உள்ளூா் மற்றும் சா்வதேச அளவில் காடழிப்பு நடவடிக்கையால் ஜெய்ர் போல்சோனரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் பெருமளவு எரிந்து அழிந்தன.
பூமியின் நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமேசான் காடுகளில் உலகின் ஒட்டுமொத்த தாவரங்கள், உயிரின வகைகளில் அரைப் பங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காடுகள் தொடா்ந்து அழிக்கப்பட்டு வருவதால் உலகில் இயற்கைச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு பெரிய அழிவுகள் ஏற்படலாம் என சுற்றுச்சுழல் நிபுணா்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.