இன மத பேதமின்றி வாழ ஐக்கிய மக்கள் சக்தியை தெரிவு செய்யுங்கள் என ரிசாட் பதியுர்தீன் தெரிவித்தார்.
வவுனியா அண்ணாநகர் கிராமத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
இந்த அழகான நாட்டில் நாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காவும் இன மத பேதங்களுக்கு அப்பால் சகோதர வாஞ்சையோடு இன மத நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் சஜித் பிரேமதாசவை பிரதமராக்க நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினை பலப்படுத்துவதனூடாக இந்த நாட்டில் நல்லதொரு ஆட்சியை நல்லதொரு நிர்வாகத்தினை எதிர்காலம் சிறப்பாக அமைவதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தருமாறு வேண்டுகின்றோம்.
கடந்த காலத்தில் இந்த மாவட்டம் முன்னேற வேண்டும் என்பதற்காக பல நல்ல பணிகளை செய்திருக்கின்றோம். சமுர்த்தி திட்டத்தினை இந்த மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினோம். சமுர்த்தி அதிகாரிகளை நியமனம் செய்ய வழிவகுத்தோம். பல அரச திணைக்களங்களில் வெற்றிடம் காணப்பட்டபோது இந்த பிரதேசத்து இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கி அவர்களின் வாழ்க்கை வளம் பெற எம்மாலான உதவிகளை செய்திருக்கின்றோம்.
இதேபோல இந்த மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிக்காகவும் விவசாயத்திற்காக குளங்களையும் புனரமைத்து வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தியுள்ளோம்.
அத்துடன் வீதிகளை புனரமைத்து மின்சாரங்களை வழங்கியதோடு வீடுகள் அற்றவர்களுக்கு வீடுகளை வழங்கி எமது மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கின்றோம். இன்று சஜித் தலைமையிலான அணியில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம், பௌத்த மதத்தை சேர்ந்த பலரும் இனமதங்களை கடந்து ஒற்றுமையாக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.
எனவே மக்கள் சரியான பார்வையில் உள்ளதால் ஐக்கிய மக்கள் சக்திக்கு இந்த மாவட்ட மக்கள் வாக்களித்து மேலும் உங்களுக்கான அபிவிருத்திகளை பெற வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்